வெகுநாள் கழித்து
அன்று தான் கண்டேன் காதலனை
முட்ட முட்டத் தாயின் பாலே
நுவுரக் குடித்து வளர்ந்த
வால் விடலையின் மீசைகள் உதிர்ந்து
வயதேறி இருந்தார்
என் உடலெங்கும் அவர் இட்டிருந்த முத்தங்கள்
கரையேறியிருந்தன நாணல்களாகி
பேராறு வற்றிப்போயிருந்த செய்தி
பருவமழையும் இழந்திருந்த பாலைப் பொய்கை
என் நிழல்களையே
வழியெங்கும்
சந்தித்தேன்
காலம் தாழிட்ட உலகிற்குள்
கழுகுகளே சுழன்று சுழன்று பறந்தன
தலையின் மேல்
அகாலம் விரிந்தது
காயம் மதர்த்து
எல்லோரும் இளமை கொண்டாற்போல்
எம் காதலும்
மீண்டும் ஓடையில் முத்தத்தின்...
அமைதியாக இருத்தல்
~ பாப்லோ நெரூதா
இப்போது நாம் ஒன்றிலிருந்து பன்னிரெண்டு வரை எண்ணுவோம்
அனைவரும் அசையாமல் இருப்போம்
இந்த ஒரு முறை பூவுலகோடு
எந்த மொழியிலும் பேசாதிருப்போம்
ஒரு நொடி அனைத்தையும் நிறுத்துவோம்
நம் கைகளையும் அவ்வளவு அசைக்க வேண்டாம்
இது ஓர் ஆச்சரியமான தருணமாக இருக்கும்
அவசரம் இல்லாமல் இயந்திரங்கள் இல்லாமல்
அனைவரும் ஒன்றாக இருப்போம்
இந்தத் திடீர் விந்தைமையில்
திமிங்கலங்களுக்குத் தீங்கு விளைவிக்காதிருப்பார்கள்
குளிர் கடலில் மீனவர்கள்
தனது காயமுற்ற கைகளைப் பார்ப்பான்
உப்பு விளைவிக்கும்...
சினிமாவில் எதுவுமே மரித்துப் போவதில்லை
ஏன் அப்படியான எவருமே கூட
உண்மையில் மரணத்திற்குப் பின் தான்
அவர்கள் பித்தமாய்க் கொண்டிருந்த கனவுகள் வழியாக
நம்மை அதிகமாய்ப் பீடித்துக் கொள்கின்றனர்
சினிமாவைக் கனவுகளாக்கி யாருமே செத்துப்போவதில்லை
அசையும் பிம்பங்களிடையே அவர்கள் அன்றாடம் வாழ்கின்றனர்
அருண் மொழி போல காற்றிலே இறகாய்த் திரிந்து வாழ்ந்தனர்
என்றும் சொல்லலாம்
மற்றோரெல்லாம் தம் மூச்சடக்கித்
தாமே தமக்குள்ளேயே மூழ்கிப்போய்விடுகையில்
அசையும் பிம்பங்கள் காலமாய்ப் பெருக்கெடுக்கும்...
நதி, ஒரு கடலைச்சேரும் முன் பயத்தில் நடுங்குவதாகச் சொல்லப்படுகிறது.
மலைகளின் சிகரங்களிலிருந்து, நீளமான சுழலும் பாதைகள் வழியாக, காடுகளையும் கிராமங்களையும் கடந்து, தான் பயணித்து வந்த பாதையினை நதி திரும்பிப் பார்க்கிறது.
தன் முன்னால் விரிந்து கிடக்கும் அந்தக் கடலைப் பார்க்கிறது. அதுவும் அந்தக் கடலினில் சேர்வது என்பது அதில் என்றென்றைக்குமாக மறைந்து போவதைத் தவிர வேறொன்றுமில்லை.
ஆனால், வேறு வழியுமில்லை. நதியால் திரும்பிப் போகமுடியாது....Continue Reading...
வாழ்வின் ரகசியத்தாழை நீக்கும்
ஒற்றைச் சொல்லை மறந்தது போல
தொலைந்த வாழ்வை ரகசியமாக்கி
நின்ற நிலை போல
தாழ் திறந்த கணம் முதல்
காலமற்ற காலநிலையாகி
வாழ்வு ரகசியத்தையே
வாழ்வாக்கிக் கொண்டது போல
துடிக்கும் கவிதை ஓலங்களை
தீ வாள் கொண்டு அறுக்கிறது
ஆழ்ந்து உறங்கும்
மெளன பாவனைகள்
குழந்தைமைக் கேவலோ
கன்னிமைக் காதலோ
விதவை மறைக்கும் மோகமோ
முகம் தீய்ந்த ஓவியமாய்
தவிக்கிறது அதன் உட்பொருள்
என் வரிகளில் நீ ஓடும்போது
கண்களில் திண்டாடும்
இரகசிய அதிர்வை
இறுதி வரி
சுட்டும் ஒரு துளியாய்
வானில் தொங்கும் மேகங்கள்
அந்தரவெளியில் அசைய
எழுத அமர்வேன்
ஜன்னல் கதவைக் காற்று வந்து தட்ட
அதைத் திறக்கும் முன்
காகிதங்களை ஒழுங்கு செய்வேன்
யானையளவு மழை வந்து
ஜன்னலை அடைத்துக் கொள்ள
ஏதும் எழுதாமல்
மழை எப்படி பறவைகளை வருத்தும்
எனக் குமைவேன்
ஓர் ஓவியத்தின் காலடி
காகிதத்தில் பதிந்ததும்
எழுதியது போதுமென எழுவேன்
நான் மழையின் வீழ்ச்சி
நீ நதியின் ஈர்ப்பு
உள்ளிழுத்துப் புணரும் வேகம்
செம்புலப்பெயல் நீர்
உடலுக்குள் மீன்களின் பாய்ச்சல்
கொடிப்பாசிகளின் தழுவல்
புரண்டணைக்கும் மூர்க்கத்தில்
சுழன்றோடிப்
பாறைகளின் படுக்கையில்
மூர்ச்சையடையச் செய்கிறாய்
உனது மடி
நான் சுழன்றாடும் சங்கப்பலகை
உனது கைகளின் மென்மையான சருமம்
கழுத்தின் பின்புறம்
கண்களை வருடும்
எதிர்வந்து நீ அழைக்கும் போது
என் கால்களைப் புல் அறுக்கும்
நீ காலத்தின் வேகம்
நான் பருவத்தின் மலர்ச்சி
Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi