வெகுநாள் கழித்து
அன்று தான் கண்டேன் காதலனை
முட்ட முட்டத் தாயின் பாலே
நுவுரக் குடித்து வளர்ந்த
வால் விடலையின் மீசைகள் உதிர்ந்து
வயதேறி இருந்தார்
என் உடலெங்கும் அவர் இட்டிருந்த முத்தங்கள்
கரையேறியிருந்தன நாணல்களாகி
பேராறு வற்றிப்போயிருந்த செய்தி
பருவமழையும் இழந்திருந்த பாலைப் பொய்கை
என் நிழல்களையே
வழியெங்கும்
சந்தித்தேன்
காலம் தாழிட்ட உலகிற்குள்
கழுகுகளே சுழன்று சுழன்று பறந்தன
தலையின் மேல்
அகாலம் விரிந்தது
காயம் மதர்த்து
எல்லோரும் இளமை கொண்டாற்போல்
எம் காதலும்
மீண்டும் ஓடையில் முத்தத்தின் மீன்கள்
கதவை முட்டித் திறந்த காலம்
எல்லா மதகுகளையும் உடைத்தது
மீன்கள் ஆழம் கண்டன
பொற்றாமரைக் குளத்தின் வற்றா ஆடியில்
Painting: Rene Magritte

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi