சினிமாவில் எதுவுமே மரித்துப் போவதில்லை
ஏன் அப்படியான எவருமே கூட
உண்மையில் மரணத்திற்குப் பின் தான்
அவர்கள் பித்தமாய்க் கொண்டிருந்த கனவுகள் வழியாக
நம்மை அதிகமாய்ப் பீடித்துக் கொள்கின்றனர்
சினிமாவைக் கனவுகளாக்கி யாருமே செத்துப்போவதில்லை
அசையும் பிம்பங்களிடையே அவர்கள் அன்றாடம் வாழ்கின்றனர்
அருண் மொழி போல காற்றிலே இறகாய்த் திரிந்து வாழ்ந்தனர்
என்றும் சொல்லலாம்
மற்றோரெல்லாம் தம் மூச்சடக்கித்
தாமே தமக்குள்ளேயே மூழ்கிப்போய்விடுகையில்
அசையும் பிம்பங்கள் காலமாய்ப் பெருக்கெடுக்கும் நதியில்
விசையுடன் நீச்சலிடுவது ஒரு பலம் ஒரு வலிமை ஒரு பித்தம்
ஒரு சூரியன் உறங்காத இரவு உறக்கம் தேவையில்லா இரவு
ஒரு பெண் தேவையில்லா இரவு
பெண்ணுக்கு ஆண் தேவையில்லா இரவு
எல்லாம் அவர்கள் செய்த விளைச்சல்கள்
முடிவுறாத ஒரு கவிதையும் அதுவே
சினிமாவின் நதி தன்னைக் காலமாக்கிக் கொண்ட பின்
எத்திசையில் எங்கே பாய்கிறது என்பதை அதில்
நீச்சலடித்துக் கொண்டிருப்பவரினும
யாரும் அதைக் கணிக்க முடியாது கரையேற முடியா குளியல்
சினிமாவிற்கு வெளியே எல்லாம் பொய் பொய்ப் பிம்பங்கள்
பாயும் பிம்பங்களிடையே வாழக் கிடைத்தவன்
தன் ஒவ்வொரு நொடியையும் யாரிடமும் கையளிக்காது
மிச்சமில்லாது வாழ்ந்து செல்கிறான்
எடிட்டர் லெனினிடம் காலம் ஒரு பெருநதியாகி ஓடுவதையும்
ஒவ்வொரு நாளும் ஒரு சூரியனை அதிலிருந்து
அவர் மேலே எழுப்பி வருவதையும் கண்டிருக்கிறேன்
பித்தம் மகத்துவமான கவர்ச்சி புன்னகை வெளிச்சம்
அவமானம் உணரா பெரு வாழ்வு
மிகை உணர்ச்சி மின்னும் செதில்கள்
இன்னும் சொல்லப்போனால்
ரித்விக் கட்டக்கின் ஒளிச் சிதறல்கள் போல வாழ்ந்த அவர்களின் துணிச்சலின் ஒரு சிலிர்ப்பைக் கூட வேறு எவரும் உணர்வதில்லை
நகரத்தின் பரபரப்பிற்குத் தன் பாதங்களை இழக்காமல்
தன் பாதையில் திசைகளை வரைந்து கொண்டவர்கள்
வெற்றி தோல்வி எந்த இலக்கணத்திற்கும் தம் வாழ்வை இழக்காமல்
மூச்சை இழக்காத ஒரு கவிதையைப் போல வாழ்ந்து தீர்க்கின்றனர்
மனதிலும் வெளியிலும் பாயும் பிம்பங்களின்காலப் பாய்ச்சலுக்கு
ஆயுள் ஏது மரணம் ஏது
என்றும் சொல்லலாம்
புகைப்படம்: ஆண்ட்ரியாஸ் ஃபைனிங்கர்

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi