புகைப்படம்: John Coplans
அனுபவங்களை எழுதும்போது கவனமாக எழுதவேண்டியிருக்கிறது. அது எப்பொழுதும் இன்னொரு நபருடன் தொடர்புடையதாகவும் இருப்பதால், தான், தன்னுடையது என்று எந்த நல் அனுபவமும் கெடு அனுபவமும் நிறைவுறுவதில்லை. கடந்த சில நாட்களாக, தற்செயலாகவே வயதில் முதிர்ந்த நபர்களைச் சந்திக்கவேண்டியதாய் இருக்கிறது. அவர்கள் எல்லோரும் தங்கள் முன்பகுதி வாழ்வில் மிகவும் தீவிரமாகக் களமாடியவர்கள். தங்கள் தங்கள் துறைகளில் புதுமையைக் கொண்டுவந்தவர்கள், நீதீயை விதைத்தவர்கள். அவர்களின் எழுபது எண்பது வயதுகளில் அரசியல் மயமான, வணிக மயமான இந்த உலகம் அவர்களைக் கைவிட்டு விடுகிறது. அவர்கள் இந்த உலகத்தைப் பற்றிக்கொள்வதற்கான பிடிமானத்தை முதுமை தளர்த்திவிட்டு, அடுத்தவர்களைச் சார்ந்திருக்க வைத்துவிடுகிறது. இவர்கள் எல்லோருக்குமே அவர்களின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கிறது, மூத்திரப்பையுடன் தான் நடமாடவேண்டியிருக்கிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டதன் விளைவு மருத்துவச் சொற்களால் கூட வரையறுக்கமுடியாதது என்பதை நேரடியாக உணரமுடிகிறது.
முதுமை தான் ஒருவருக்கு மிக அதிர்ச்சியான ஒன்றாக இருக்கப்போகிறது என்று ஒரு பழமொழி உண்டு . தங்கள் தங்கள் சுயமரியாதை உணர்வின் வழி வந்த பழக்கத்தில் இன்றும் அவர்கள் உயிர் தாங்கி, உடல் ஏந்தி நடமாடிக்கொண்டிருக்கின்றனரே அன்றி, அவர்கள் அப்படி நோயுற்றிருப்பதற்கும் சரியான நல்வாழ்வை பெறமுடியாததற்கும் நாம் தான் காரணம் போல ஒரு குற்றவுணர்வு குடிகொண்டு விடுகிறது. நம் அன்றாட வாழ்விற்கான பயணத்திலும் போராட்டத்திலும் இவர்களுக்கான நல்வாழ்வை உறுதிசெய்யமுடியாத இடைவெளியும் உருவாகிவிடுகிறது. இவர்களில் ஒருவர் முன்பு தேவாலயங்களில் மதகுருவாகப் பணியாற்றி, பின்னாட்களில் களப்போராட்டங்களில் ஈடுபட்டவர். பறை இன்று எங்கெங்கும், பொதுவெளிகளில் வாசிக்கப்படும் ஒரு இசைக்கருவியாக மாறியதில் இவருக்கு மிகுந்த பங்கு இருக்கிறது. அவருக்கு உதவியாளராக இருந்தவரே, அவர் கையிருப்பில் இருந்த பணத்தைக் களவாண்டுவிட்டார். ஆனால் என்ன செய்வது. எழுந்து கைத்தாங்கலாக நடமாட இன்னொருவரின் உதவி தேவைப்படும் இவருக்கு, இவர் பணம் திருடப்பட்டதை விட அவரின் உதவி பெரியதாக இருக்கிறது.
இன்னொருவருக்கு, படுக்கையில் இருக்கும் இந்த நேரத்திலும் மொழி ஆய்வு தொடர்பான கருத்துகளை எங்கேனும் பதிவு செய்துவிட வேண்டும் என்ற தீரா ஆதங்கம். எழுதி முடிக்கவேண்டிய இன்னொரு நூல் திட்டம் அப்படியே இருக்கிறது என்கிறார். மற்றொருவர், நான் ஏதேனும் இயக்கமோ அமைப்போ தொடங்கினால் மீதியுள்ள நாட்களையும் பயனுள்ளதாகக் கழிக்கலாம் என்கிறார். ஏதாவது அமைப்பைத் தொடங்கிக்கொடு என்று கெஞ்சுகிறார்.
நம் நாட்டைப் பொறுத்தவரை, சமூகத்தைப் பொறுத்தவரை, அறுபது எழுபதை நெருங்கிவிட்டாலே அன்றாடவாழ்க்கையிலிருந்து விலகிவிடவேண்டும் என்பதான கட்டமைப்பு தான் இருக்கிறது. இயந்திரமயமாக ஓடிக்கொண்டிருக்கும் வரை தான் வாழ்க்கை. அல்லது அப்படி இயந்திரமயமாக ஓடிக்கொண்டிருப்போருக்குத் தான் இந்தச் சமூகக்கட்டமைப்பு உதவக்கூடும். அல்லது, நேற்று ஒரு மருத்துவமனையில் உயிர்விட்டவரை திரை மறைவில் மூடிப்போட்டு நீண்ட நேரம் ஒதுக்கிவைத்துவிடும் காட்சி போன்றது தான் சமூகம்.
இன்னும் சாவதற்கு எத்தனைக்காலம் என்று அளந்து அளந்து வாழ்வதை விட, உயிர் போவதற்குள் ஒவ்வொரு நாளையும் எப்படி உயிர்ப்புடன் வாழலாம் என்ற உள்நோக்கம் தானே அழகானதாக இருக்கும். தங்கள் கடைசி வாழ்நாள் வரை ஒருவரால் தன்னை கண்ணியத்துடன் காப்பாறிக்கொள்ள முடிகிறது பிறநாடுகளில். நம் நாட்டிலோ கண்ணியம் என்றால் கிராம் என்ன விலை என்று கேட்கும் நிலையில் தான் எல்லாமும் இருக்கிறது. அதிலும் குழந்தையாகவோம் மாற்றுத்திறனாளியாகவோ முதியவராகவோ இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். முதுமையைச் சுமப்பது என்பது சாதாரண விடயமாய் இல்லை.
*
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.
Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book.
Address: 262 Milacina Mrest.
Phone: +91 3333 6789.
Tax: +91 3333 6789.
Email: support@kr.com
Website: www.kr.com