பெரியாரும் பிற ஆண்களும்
18 Sep 22
Stories
பெரியாருக்கும் பிற ஆண்களுக்கும் என்ன வேறுபாடு. இன்றும் பெரியாரைப் போல அல்லது பெரியாரை மறுத்துச் செயல்படும் சமூகத்தலைவர்கள், களப்பணியாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள் போன்றோருக்கும் என்ன வேறுபாடு. ஏன் பெரியார் இன்றும் சமூகத்தின் எதிரிகள், அவர் பெயரைைக் கேட்டாலே கொந்தளிக்கும்படியான புரட்சியாளராக இருக்கிறார் என்பதற்கு எனக்குக் கிடைத்த பதில் இது தான்.
இதை அறிந்துகொள்ள உளவியல் ரீதியான புரிதல் வேண்டும். பெரியாரின் சமூகப்பணியும் எழுத்துப்பணியும் எந்தப்பணியும் தன் முனைப்பு அற்றதாக இருந்தது. எந்த நிலையிலும் அவர் தற்பூசனை - தன் வழிபாடு மனநிலைக்குச் சென்றாரில்லை.
இதுவே அவரை ஒரு நூற்றாண்டியின் சமூக உழவனாக்கியது.
இன்றோ, ஆண்கள் தற்காதல் மனநிலையில் செயல்படுகிறார்கள். தன்னம்பிக்கையற்ற, சுயசந்தேகங்கள் நிறைந்த பிற ஆண்களுக்கு இத்தகைய ஆண்களின் தற்காதல் சித்திரம் வசீகரமானதாகிறது. எந்த எதிர்க்கேள்வியும் எழுப்பும் அவசியம் எழுவதில்லை. இத்தகைய தற்காதல் மனநிலை ஆண்களுக்கு மார்க்கெட்டில் பெரிய விலைமதிப்பு உண்டாகிறது. இத்தகைய ஆண்களால் சமூகத்திற்கு எந்தப்பயனும் இல்லை. தற்காதல் மனநிலையில் செயல்படுவோருக்கு அவரால் அவருக்கு மட்டுமே பலன். பிற ஆண்களின் திறனை ஆற்றலை வாழ்வைச் சுரண்ட இத்தகைய ‘தற்காதல்’, மனநிலை உதவுகிறது. இதைப் பிற ஆண்கள் புரிந்துகொள்வதில்லை. இன்றும் சமூகத்தில் கொண்டாடப்படும் ஆளுமைகளில் பெரும்பான்மையோர் இந்தத் தற்காதலர்கள் தாம்.
இதில் முற்றிலும் மாறுபட்டவர் பெரியார். அவர் பெயரைச் சொன்னாலே வெறுக்கவும் கொந்தளிக்கவுமான மனநிலை கொண்டோரும் இத்தகைய தற்காதலைச் சார்ந்து அல்லது தற்காதலரைச் சார்ந்து இயங்குவோர் என்று சொல்லலாம். இது ஒரு சமூகச்சுழல். பெரியாரை முழுமையாக அறிந்தவர்கள் எந்தத் தன்முனைப்புமின்றி இன்றும் செயல்படுகின்றனர். எப்பொழுதும் செயல்பட்டிருக்கின்றனர். தன் முனைப்பு அற்றுச் செயல்படும் ஓர் ஆண், இன்றைய சமூகத்தின் அவசியம்.