
வாழ்நாளில் இதுவரை நூற்றுக்கணக்கான திரைப்படவிழாக்களில் பங்கெடுத்திருக்கிறேன். திரைப்படவிழா தொடங்கும் முன் சென்று முடிந்து எல்லா அரங்குகளும் வெற்றிடமாகும் வரை தங்கியிருந்து கூடத்திரும்பியிருக்கிறேன்.என்றாலும் மிகக் குறைவான நேரமே கழிக்கும் படியான ஒரு பரபரப்பான சமயத்தில் திருவனந்தபுரத்தில் கேரளாவின் 14-வது சர்வதேச ஆவணப்பட குறும்பட விழாவில் ஒரு நாளே பங்கெடுத்துக் கொண்டு திரும்பினேன்.
திரைப்பட விழாக்களின் தன்மைகள் நிறைய மாறியிருக்கின்றன. வேட்கையான முதிர்ந்த சமூகத்திடமிருந்து அதிகமான தேடல் உடைய, நிறைய கேள்விகளை எழுப்பும் புதிய தலைமுறைக்குத் திரைப்படவிழாக்கள் கைமாறியிருக்கின்றன. ஏஆர்ரஹ்மான் ஃபவுண்டேஷன் வழங்கும் iTALES தொகுப்பின் ஒரு படமாக என்னுடைய ‘அகமுகம்’ குறும்படமும் முதல் திரையிடலுக்குத் தேர்வாகியிருந்தது. ஈரானிய இயக்குநர் மொஹ்சன் மெக்மல்பஃப் உலகடங்கல் காலத்தில் நடத்திய ”திரைப்படம் உருவாக்கும் கலை” என்ற பயிற்சிப்பட்டறைக்குப் பின், கலந்துகொண்ட நாங்கள் எல்லோரும் எடுத்தளித்த முப்பது படங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஐந்து படங்களின் தொகுப்பு தான் iTALES. ஐஃபோனில் எடுக்கப்பட்ட படங்கள், ஐந்துநிமிட கால அளவுடைய படங்கள். ஒரு மாதத் தயாரிப்பு காலத்திற்குள் எடுக்கப்பட்ட படங்கள். பெண்கள் தாம் சொல்ல விரும்பிய கதைகளைப் படமாக்குதல் எனப் பல காரணங்களால் அவை iTALES என்றாகின. சவிதா சிங், மதுமிதா, பூஜா, ராஜஶ்ரீ மற்றும் நான் என ஐந்து இயக்குநர்களின் படங்கள். அரங்கு நிரம்பிய பார்வையாளர்கள், உற்சாகம் நிரம்பிய உரையாடல், கேள்விக்கணைகள் எனப் புதிய அனுபவம்.
இந்தப் பயணத்தில் நிறைய நிறைய கலைஞர்கள் என்னுடன் இணைந்திருந்தனர். குறிப்பாக, கதீஜா ரஹ்மான் & க்யோக்கோ தான். நடிகை கிரில்ஷீலா கிறிஷ்டோஃபர், ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி, கலை இயக்குநர் கணேஷ் ராமையா எனத் திரைப்படவிழா நிகழ்வில் தம் ஈடுபாட்டைப் பகிர்ந்துகொண்டனர். நாமக்கல்லிலிருந்து கவிஞர் தனசக்தி, படத்தைப் பார்ப்பதற்காகவே திருவனந்தபுரம் வந்திருந்தார். அவர் உடன் இருந்தது, ஒரு புகைப்படக்கலைஞரைக் கூட வைத்திருந்தது போன்று ஆயிற்று. முழு நிகழ்வும் ஆவணமாகியது. நாகர்கோவிலிலிருந்தும் நண்பர்கள் சில திரைப்படவிழாவிற்கு வந்து படத்தை நேரடியாகப் பார்த்து வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
திரைப்படவிழாவிற்கு என்று ஒருவகையான உன்மத்தம் இருக்கிறது. அது பார்வையாளராகச் சென்றால் மட்டுமே நுகரக்கூடியது. படம் திரையிடச் சென்றால், புதுவகை கால வெள்ளம் வந்து நாளை அடித்துச் சென்றது போல ஓர் அனுபவம். மனதிலிருந்து வடிந்துவிடாத ஒரு நாள்.
#IDSFFK #14IDSFFK #IDSFFK2022 #iTALES #ARRahman #ARRahmanFoundation #MohsenMakhmalbaf #filmfestival #KSCA
Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi