உருமாற்றம்

உருமாற்றம்

23 Aug 22
Stories


நான் உருமாறிவிட்டேன்

காலங்களின் உருக்குலைந்த எழில்

பூமியைச் சுற்றி வருவது போல

பறவையொன்று அடிவானில் சிறகடிப்பது போல

மதியத்தின் உச்சத்தில் 

ஒற்றைமரத்திலிருந்து தேங்காயொன்று

அறிமுகமான சத்தத்துடன் முற்றத்தில் வீழ

மரத்தின் கிளைகள் எல்லாம் 

மஞ்சள் கொடிகளாய் அசைந்து பறந்தெழும்

பகலில் உன் மீது வீசும் கதிர்காலங்களில்

உன்னைக்காண்பது மறந்து

இரவுகளின் திண்மையான தருணங்களில்

மோகக்குமிழ்கள் சிதற

எல்லோரும் குடும்பச்சவால்களில் அயர்ந்துபோய்

கனவுகளில் கூடத்தொலைந்து போய்

காலையில் கனவுகளை மீளச்சொல்லா

அன்றாடத்திலும் கரைந்து போய் குழம்பிப்போய் 

சென்ற வழியே வந்து திரும்பும்

பாதைகளில்

நாமென்ற அபூர்வம் குலையாது

சூரியனைச் சிதறவிடாது

என்னை வீணையாக்கு வீணையாக்கு

என்று மன்றாடுகிறேன்

நீ கண்மூடி விரல்களால் 

காற்றின் நரம்புகளைக் கனவு காண்கிறாய்

 

 

குட்டி ரேவதி

 

Write To Author

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi