
இங்கே இருக்கும் பாண்டிச்சேரி தான். இந்த முறை செல்லும் போது வேறு நாட்டிற்குச் செல்வது போன்ற உணர்வே ஏற்பட்டது. நிறைய எழுத்து வேலைகள். குழந்தைகளுக்கான ஒரு நூல் வேலையை எடுத்துக்கொண்டிருந்தேன். அதை முடிப்பதற்குச் சில நாட்கள் தனிமை தேவைப்பட்டன. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் சீனி, ஆவணப்படப் பயிற்சிப்பட்டறை நடத்தினார். அவருக்கு விருந்தினர் அறை தந்திருந்தனர். அறையின் பின்சுவர் ஒரு காட்டிற்குள் திறந்தது போல சுவரில் அகண்ட ஜன்னல். அறைக்குள் நுழைந்தால் காட்டிற்குள் நுழைந்ததுபோல் உணர்வு. காரணம் பலவாயிற்று பாண்டிச்சேரி செல்ல. பாண்டிச்சேரிக்கு பல முகங்கள் உண்டு. ஆரோவில் முகம், ப்ரெஞ்சு முகம், மீனவ நகர முகம், தமிழ் இலக்கிய எழுச்சி முகம் என்றாலும் எப்பொழுதும் அதிகம் கவர்வது பாண்டிச்சேரி கடற்கரை.
இந்த முறை, நண்பர்கள் அருள்செல்வன் - செல்வி உடன் பலமுறை காலை, மாலை என்று நடைப்பயிற்சி செய்தோம். ஒரு நாள், எங்களுடன் கருப்பு பிரதிகள் பதிப்பாளர் நீலகண்டனும் தற்செயலாய்ச் சேர்ந்துகொண்டார். நீண்ட நீண்ட நடை, நீள உரையாடல், நீண்ட நேர உணவு, நீண்ட நேர எழுத்து என எல்லாவற்றையும் நீளமாக்க முடிந்தது. பாண்டிச்சேரி கடல் நவீன வசீகரத்தைத் தன்னகத்தே தக்கவைத்துக்கொள்ள முனைகிறது. இவற்றையெல்லாம் தாண்டி, தோழர் பூவுலகின் நண்பர்கள் சீனு தமிழ்மணி, பேராசிரியர் ரவிக்குமார் அவருடைய மாணவர்களைச் சந்தித்தது நல்ல அனுபவம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழில் கவிதை இயக்கங்கள் குறித்து உரையாட இருவருமே சரியான பின்புலப்பயிற்சி, வாசிப்பு கொண்டவர்கள். பேராசிரியர் ரவிக்குமார் தேடிவந்து கவிஞர் கல்பனா, க. பஞ்சாங்கம் நூல்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அவர்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லை என்று வருத்தப்படுகிறேன்.
பல்கலைக்கழகத்தில், சீனிவாசன் மாணவர்களிடையே She Write ஆவணப்படத்தைத் திரையிட்டார். தமிழின் நான்கு பெண் கவிகள் பற்றியது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சலி மாண்டய்ரோ மற்றும் ஜெய்சங்கர் இயக்கியது. அதில் தோன்றும் நான், நானே அல்ல என்னும் அளவிற்கு இன்று நிறைய பரிணாமம் பெற்றிருக்கிறேன். பல்கலைக்கழக வளாகம், நானும் ஒரு மாணவராக மாட்டோமா என்ற ஆசையைத் தந்தது. பாண்டிச்சேரி ஆசிரமம் ஒட்டிய சாலையில் இந்த நரிக்குறவர் இணையரைக் கண்டேன். கணவரின் தலைமுடியை வாரிக் கொண்டிருந்தார் அவருடைய மனைவி. பண்பாட்டுச் சுவடு போல. அதை இங்கே பதிவு செய்திருக்கிறேன்.
இந்த முறை பாண்டிச்சேரி அள்ளி அள்ளித் தந்ததைப் போன்ற உணர்வு. சென்னை அவசரமாய் அழைக்க, இந்த உரையாடல்கள் முடியவும், பேருந்தேறி சென்னை வந்து சேர்ந்தேன்.
Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi