
1. மீண்டும் கண்டெடுக்கப்படும்
2. புலியும் புலிபோலாகிய புலியும்
3. திராவிட அரசி
4. பெண்ணுடலென்னும் தொன்மம்
5. நுழைவாயிலென ஒரு நிலைக்கண்ணாடி
6. மூவாயிரமாண்டு காதல் மொழிகள்
7. நாம் சந்தித்து ஒரு நூற்றாண்டு இருக்கலாம்
இந்த ஏழு நூல்களுமே மூன்றாவது தொகுதியாகின்றன. எவ்வளவு பரபரப்பான காலமாக இருந்தாலும், முடக்கமான காலமாக இருந்தாலும்
கவிதை எழுதிக்கொள்ளாமல் இருக்கமுடிந்ததில்லை.
பல சமயங்களில் சிந்தனைக்குள்ளேயே வரிவரியாகி, திரிதிரியாக அணைந்து ஆவியாகிப் போன கவிதைகளும் உண்டு.
மெனக்கெட்டு ஃபோனிலோ, எழுத்திலோ பதியவைத்து தொகுத்த மிச்சக்கவிதைகளே இவை.
வேறு எந்தப் பணியைச் செய்து முடிக்க முயன்றாலும், ஒரு கவிதை நூலை நிறைவு செய்யாமல் வாழ்வு மகிழ்வு பெற்றதில்லை.
தனக்குத்தானே மொழியைப் புதுப்பித்துக்கொள்ளல், கவிதையில் நவீன வடிவம் பெறுதல் சொற்சேர்க்கையில் புத்தெழுச்சி,
உடலரசியலில் புத்துணர்வு பெறுதல், தற்காலப் படிமங்களைக் கண்டடைதல் என அகம் நோக்கிய புற உருவம் பெறும் எழுத்திலேயே பயணித்துக்கொண்டிருக்கிறேன்.
இவை தாண்டிய எந்த நோக்கமும் எங்குமே இல்லாமல் ஒரு தனித்த பாலைப்பசுஞ்சோலையாக எழுத்தில் உயிர்த்திருக்கமுடிந்திருப்பதை
இந்த ஒட்டுமொத்தத் தொகுதியையும் ஒருங்கிணைத்தபோது தோன்றியது. ‘பூனையைப் போல அலையும் வெளிச்சம்’, தொகுப்பும் போது இருந்த
அதே தீவிரம் உள்ளே ஒளி கொள்கிறது.
உலகடங்கல் காலம், அலைக்கழியும் பருவம், பெண்ணியப் போர்க்களம், காதல் வெளி, தத்துவ விவாதம்
ஆகிய வெவ்வேறு வெளிகளை தன்னகப்படுத்தியிருக்கிறது இந்தத் தொகுதி.
மனதில் எரியும் தத்துவச் சிந்தனைகளினும், காதல் கவிதைகளும் பெண்ணின் பெரும்பொருள் பேசும் கவிதைகளுமே மேலோங்கியிருப்பதை
கவிதைகளை வரிசைப்படுத்தித் தொகுக்கும்போது, ஒட்டுமொத்த வாசிப்பில் உணரமுடிந்தது.
உலகம் எங்கிலுமாக நிலவும் வாழ்வு - மரண நொடிப் போராட்டங்களில் கவிதை வழியாகவே நான் உயிர்த்திருப்பதாக உணர்கிறேன்.
Zero Degree Publishing வெளியீடாக, இந்தத் தொகுதி வெளிவருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
**
Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi