தமிழ்நாடு எத்துணை அழகுடைத்து!

தமிழ்நாடு எத்துணை அழகுடைத்து!

02 Sep 22
Stories


 

புகைப்படம்: திருச்சி அருகே பனிபடர்ந்த இன்றைய காலை

 

 

பயணக்கட்டுரை நூல் எழுதவேண்டும் என்பது என் நீண்ட நாளைய ஆசை. ஆனால், வாழ்க்கையில் தினம் தினம் பயணங்கள் அமையும் போது பயணங்களை அனுபவிப்பது விடுத்து எப்படி எழுதிக்கொண்டிருப்பது. பெரும்பாலான நேரங்களில் சூழலைக் கவனிப்பதும், நிலக்காட்சிகளை ரசிப்பதும் என ஒரு தீரா வேட்கையே பயணங்களுக்கு இழுத்துச் செல்கிறது.  நான் அறிந்ததில், தமிழர்களுக்குப் பயணத்தில் பெரிய ஆர்வம் இல்லை. எவ்வளவோ பெரிய பணக்காரர்கள் கூட ஒரு சிறிய நாட்டிற்கு ஏன், தமிழகத்தைக் கூட முழுமையாகச் சுற்றிப்பார்த்திருக்க மாட்டார்கள். எத்தனையோ நூறு முறை தமிழகத்தில் சுற்றி அலைந்தும் இன்னும் பார்க்காத தொன்மையான இடங்களும், இயற்கை அழகு நிலைத்த இடஇடக்ங்களும், காடுகளும், மலைகளும்,  நதிப்படுகைகளும், அருங்காட்சியகங்களும், கிராம வனப்புகளும் இருந்து கொண்டே இருக்கின்றன. ஐந்திணைகளாக தமிழ்நாட்டை ரசிக்கத் தொடங்கிவிட்டால், ஒரு போதை சூழ்ந்துகொள்ளும்.

 

தமிழர்களுக்கு ஏனோ அடித்துப் பிடித்து வீட்டிற்குள் சென்று பதுங்கிவிட வேண்டும். டிவி பெட்டிகளில் ஒடுங்கிவிட வேண்டும் என்ற உணர்வு ஓங்கிவிடுகிறது. அதே போல் பயணிப்பவர்களாக இருந்தால், நம் நகரக்கட்டமைப்பு, பேருந்து ரயில் வசதிகள் எல்லாமே மாறிவிடும். சாலையில் சளியைத் துப்பிச்செல்வதும், கழிவறைகளைப் பயன்படுத்தத் தெரியாததும், விடுதிகளைத் தூய்மையாக வைத்துக்கொள்ளத் தெரியாததும் பயண அறிவு இன்மையிலிருந்தே வருகிறது. பயணத்தின் போது ஒழுகவேண்டிய விடயங்கள் என்று நம் எல்லோருக்கும் கற்பிக்கப்படவேணும் அந்த அளவிற்கு நாம் பயணங்கள் மீது ஆர்வமோ, அக்கறையோ அற்றவர்களாக இருக்கிறோம். பயணம் சென்று வருபவர்களின் நுகர்வுப்பண்பாடும் மலிவான அனுபவங்கள் நோக்கி ஈர்ப்பவையாக இருக்கின்றன. ஓரிடத்தின் கால அருமை, நிலப்பெருமை, மக்களின் மாண்பு போன்றவற்றை மனதில் வைத்து எவரும் பயணிப்பதில்லை. குறிப்புகளாகக் கூட யாரும் எழுதிவைக்கும் வழக்கம் இன்மை தொடர்கிறது.

 

படப்பதிவுப்பணிகளில் முக்கியமான பணி, படப்பதிவுக்கான இடங்களைத் தேடிக்கண்டறிவது தான். ஏற்கெனவே சேகரத்தில் வைத்திருக்கும் புத்தெழுச்சியான இடங்களுடன் புதிய புதிய இடங்களையும் தேடிச் சென்று கண்டடைவது ஒரு முக்கியமான திறன்.

 

பள்ளிக்காலங்களில், மாணவ மாணவியருடன் சுற்றுலா செல்வதை அப்பா எப்பொழுதுமே ஊக்குவித்தார். அதுபோலவே, ஆண்டிற்கு ஒரு முறை குடும்பமாக நீள் சுற்றுலா செல்வதும் வழக்கம். பயணங்களுக்கான உடை, உணவு தயார் முறைகளை மிக நேர்த்தியாகச் செய்யக்கூடியவர், திட்டமிடக்கூடியவராக இருந்தார் அப்பா. வாசிப்புப் பழக்கத்தைப் போலவே பயணப்பழக்கத்தையும் எனக்குள் புகுத்தியிருக்கிறார் என்று உணர்கிறேன். பயணங்கள் கற்றுத்தரும் அருமைகளை வேறு எதுவுமே கற்றுத்தருவதில்லை. வாழ்க்கையின் வேகத்தைக் குறைக்கிறது. மரணத்தைத் தாமதப்படுத்துகிறது. ஒவ்வொரு பயணத்திற்குப் பின்பும் நானே எனக்குப் புதிய மனிதராகத் தோன்றுகிறேன். பழைய கசடுகள் வழிகளிலேயே ஆவியாகிப் போகின்றன.

 

**

 

 

Write To Author

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi