நண்பர்களே, வணக்கம். இன்னும் கொரோனாவிற்கு எதிர்ப்பு மருந்து என்று ஒன்று இல்லை என்றே கொள்வோம். டெங்கு காலத்திலும் சிக்குன் குன்யா காலத்திலும் கடைபிடித்த எளிய தடுப்பு மருந்துகள் கொரோனாவிற்குப் பொருந்தாது என்றும் வைத்துக்கொள்வோம். என்றாலும், தொடரும் எச்சரிக்கைகளை முன்வைத்தும், ஏற்கெனவே இக்கட்டான நோய்நெருக்கடிக் காலங்களிலும் துணை நின்ற சித்த மருந்தையே ஒரு சித்தமருத்துவராக இங்கு முன் வைக்கிறேன். என் சக மருத்துவர்களும் பொதுவெளிகளில் இதைக் குறிப்பிட்டு துல்லியமாகத் தொடர்ந்து பேசிவருகின்றனர்.
நாம் இரண்டு வகையான விடயங்களைக் கடைப்பிடிக்கலாம். ஒன்று, தூய்மைக்கான அணுகுமுறைகள். இரண்டாவது, நம் உடலின் எதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்திக்கொள்வது. இதனால், ஒரு வேளை, வைரஸ் தாக்காமல் போகலாம். அல்லது, வைரஸ் தாக்கினால் அதை வெல்லும் வலிமையையாவது பெறலாம்.
கபசுரக்குடிநீர், பதினைந்து மூலிகைகள் சேர்ந்தது. இது ஒரு சரியான தற்காப்பு மருந்து, நுரையீரலை வலுவூட்டும். எதிர்ப்புசக்தி கொடுக்கும் மருந்து. ஐந்து கிராம் தூளை எடுத்து 300மிலி நீரில் கலந்து கொதிக்கவைத்து, அதை 30மிலி. யாக சுருங்கவைத்து வெறும் வயிற்றில் தொடர்ந்து இருவேளை வீதம் ஐந்து நாள்கள் குடிக்க வேண்டும். தேனுடன் கலந்தும் கொடுக்கலாம். மேலும், மிளகு, சீரகம், பூண்டு, சிற்றரத்தை, மஞ்சள் போன்றவற்றை நம் அன்றாட வாழ்வில் சேர்த்துக் கொள்வது, கபம் சார்ந்த நோய்களுக்கு நாம் ஆட்படாமல் காக்கும்.
இரண்டாவது கட்டம்: இந்த வைரஸ், நுரையீரல் பகுதியைப் பாதிப்பதால் சுவாசக்கோளாறுகளைத் தவிர்க்கும், குணமாக்கும் மூலிகைகளையும் முறைகளையும் பின்பற்றுவது அவசியம். நம் கவனமெல்லாம், நுரையீரல் பகுதிகளைத் தூய்மையாகவும் ஆரோக்கியத்துடனும், வலிமையுடனும வைத்துக்கொள்வதில் இருக்கட்டும். இது அவசியம். இள வெந்நீர், மிளகு, நற்காற்று, சுவாசப்பயிற்சிகள் உதவும். மூன்று நல்மிளகுகளை நசுக்கி நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, தேனுடன் கலந்து குடிக்க, தொண்டைப்பகுதி நலனுடையதாக இருக்கும். தொண்டை தான் கிருமிகள் தங்குவதற்கு இடமானவை என்பதால். தொண்டையையும் மூக்கையும் அவற்றை நோக்கிச் செல்லும் நம் கைகளையும் தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும்.
மீண்டும் சொல்கிறேன். இவையெல்லாம் தடுப்பு முறைகளும் எதிர்ப்பு முறைகளுமே. எனக்குத் தனிப்பட்ட வகையில் இம்மருந்துகள் மீது இருக்கும் நம்பிக்கையும் உறுதியும் அதிகம், தீவிரம். என்றாலும், டெங்கு, சிக்குன்குன்யா இன்னபிற காலங்களில் நாம் சித்த மருத்துவத்தைக் கடைபிடித்தும் இன்றும் அது குறித்த பரப்புரையை தொடக்கத்திலிருந்து ஏற்படுத்தவேண்டியிருப்பது நம் சமூகச்சூழலின் கீழான நிலை தான்.
எவரோ தன் பதிவில் இதெல்லாம் அந்த அயல்நாட்டார்க்குத் தெரியாமலா இருக்கும் என்று எழுதியிருந்தார். உலகமயமாக்கலுக்குப் பின் எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்துவிட்டதாகவும், மரபை வென்ற ஒரு சிந்தனையை நாம் அடைந்துவிட்டதே நவீனம் எனவும் மனமயக்கம் அடைந்துவிட்டோம். இந்த மருத்துவத்தைப் பின்பற்ற விரும்பாதவர்கள் இதைப் புறக்கணிக்கலாம். அதற்கான எல்லா உரிமையும் ஒருவருக்கு உண்டு. மனித உடல் அறிவியல் என்பது பரந்த சிந்தனை மரபுகளுக்கும், மருத்துவ அணுகுமுறைகளுக்கும், அறிவியல் பரிசோதனைகளுக்கும் வழிவிடுவது.
இந்தக் கொரோனாஅனுபவத்திற்குப் பின் உறுதியாக முன்பு வாழ்ந்ததைப் போல் நாம் வாழமாட்டோம், வாழமுடியாது என்று நம்புகிறேன். நம் மனோபாவத்தையும் உடல் நலன்குறித்த விழிப்புணர்வையும் பெரிய அளவில் இந்தக் கொரோனா வைரஸ் மாற்றியிருக்கிறது. வருமுன் காப்போம். உடல் நலம் பேணுவோம். உயிர் வலிமை போற்றுவோம். உறவுகளைக் கொண்டாடுவோம். நன்றி.
#கொரோனா

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi