யசுனாரி கவபட்டா

யசுனாரி கவபட்டா

19 Nov 19
Article


யசுனாரி கவபட்டாவை, தூங்கும் அழகிகளின் இல்லம் வழியாக சீனிவாசன் தான் அறிமுகப்படுத்தினார். Snow Country நாவலை இரண்டு ரயில் பயணங்களுக்கிடையே வாசித்து முடித்தேன். இவரது நாவலில் துயர் கொண்ட பெண்களின் மீதான பரிவு முழுமையானது, அழகியல் வடிவம் கொண்டது. கதையின் நிலவெளியும் ஒரு கதாபாத்திரமாகி நம் கற்பனையில் அது பதிந்திருக்க, அந்தக் கதைநிலத்தில்  கதையை வாசித்த படியே நாம தொடர்ந்து பயணிக்க முடியும். Snow Country நாவல், ஒரு Geisha பெண்ணைப் பற்றியது. 


யசுனாரி கவபட்டாவின் எழுத்தில் இரண்டு விடயங்களை உணரமுடியும். நேரடியாகப் புலன்களைத் தொடுகிற நடை. ஆனால், எங்குமே அதன் உணர்வுகளின் அழகியலைச் சிதைக்காத கவனம். இரண்டாவதாக, கதையின் அடித்தளத்தை நாம் உணரும் முன்னேயே வேறு இடத்திற்கு நகர்த்தி விடுகிற பாங்கு. ஒவ்வொரு கதையாக அவரை வாசித்து இந்த விடயத்தை அறியலாம்.


தன் எளிய படைப்புகளில் செதுக்கிய மானுட வாழ்வின் தனிமைக்காகவும் செவ்வியல் படைப்புகளுக்காகவும் நோபல் பரிசு பெற்ற இவர் தன் 72-வது வயதில் தற்கொலை செய்து கொண்டார். இவரது இளமைப் பருவத்தைத் தேடி வாசித்த போது, மிகவும் விநோதமான ஒன்றாக இருந்தது.  யசுனாரிக்கு இரண்டு வயதாக இருக்கும்போது, அவர் தந்தை இறந்து போனார், அவரது மூன்றாவது வயதில் அம்மாவை இழந்தார். தொடர்ந்து, அவரை வளர்த்துவந்த தாய் வழிப் பாட்டியை தன் ஏழாவது வயதில் இழந்தார். தன் ஒரே சகோதரியையும் ஒன்பதாவது வயதில் இழந்தார். வாழ்வின் தொடக்கத்திலேயே அவருக்கு உண்டான தனிமையும் பண்பாட்டு வேர்களற்ற தன்மையும் தான் அவர் எழுத்தில் வேர்கொண்டு இருந்தன என்று சொல்கிறார்கள் விமர்சகர்கள். 


இவர் எழுத்தில் ஓவியத்தின் பாங்கைக் காணமுடியும். நிகழ்வுகளை வரைவோவியங்கள் போல செதுக்கிக் கொடுக்கும் அந்த மூர்க்கம் தான் அவரது நாவல்களை மிகவும் எளிமையானதாகவும், கூர்மையானதாகவும் ஆக்குகின்றது. யசுனாரி கவபட்டாவை அறிந்து கொள்வது ஈடு இணையற்ற ஓர் ஆழமான அனுபவமாக இருக்கும். மனித ஆழங்களுக்குள் தன் கதாபாத்திரங்களை இறக்கி விடுகிற சாகசத்தில் யசுனாரி, தன் கலை பண்பாட்டு அறிவையும் தனிமனித அனுபவங்களையும் ஒரு சேரப் பயன்படுத்துகிறார்.  நாவலில் இருந்து வெளியே வந்த பின்பு, கதாபாத்திரங்கள் நம்மைத் துரத்தும், அல்லது நாம் அந்தக் கதாபாத்திரங்களாகி இருப்போம். முழுநிலவின் வெளிச்சம் வந்து நம் மீது வீழ்வதைப் போல பித்தநிலை அனுபவமாக இருக்கும். 

Write To Author

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi