என்னென்ன எழுதியிருக்கிறேன்?

என்னென்ன எழுதியிருக்கிறேன்?

28 Nov 19
Article


 

நான் எனக்காகச் செய்துகொள்ளும் செயல் நூல்கள் எழுதுவது மட்டுமே என்ற நம்பிக்கை. இதுவரை, எழுதியுள்ள பன்னிரண்டு கவிதைத் தொகுப்புகளும்  அதாவது, பூனையைப் போல அலையும் வெளிச்சம், முலைகள், தனிமையின் ஆயிரம் இறக்கைகள், உடலின் கதவு, யானுமிட்ட தீ, மாமத யானை, இடிந்த கரை, காலவேக மதயானை, அகவன் மகள், ஹீராக்ளீட்டஸின் நதி, அகமுகம்,  மூவா மருந்து ஆகிய நூல்கள் அனைத்தும் மொத்தமாக, இரண்டு தொகுதிகளாக Zero Degree Publishing வெளியீடாக, “குட்டி ரேவதி கவிதைகளாக”, வெளிவருகின்றன.

சிறுகதைகள் எழுதும் போது இரத்தச்சுத்திகரிப்பு போன்ற அனுபவம் நிகழ்வதால் தொடர்ந்து சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். முதன்முதலாக நான் எழுதிய சிறுகதைகளை வாசித்துவிட்டு, அவற்றை நிதானமான அமைதியுடன் தொகுத்து, ‘நிறைய அறைகள் உள்ள வீடு’, எனப் பெயரிட்டுப் பாதரம் பதிப்பகம் வழியாக வெளியிட்ட நண்பன் சரோ லாமாவின் அன்பு ஈடு இணையற்றது. சிறுகதைகளை நூல்களாகப் பதிப்பிக்கும் முதல் அனுபவத்தை சரோ லாமாவே தந்தார். அதற்குப் பிறகு, நற்றிணை யுகன், “விரல்கள்”,என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பை வெளியிட்டார். இந்த இரண்டு தொகுப்புகளும் Zero Degree Publishing வெளியீடாக, இப்பொழுது மறுபதிப்புப் பெறுகின்றன.

ஒவ்வோர் ஆண்டும் தீவிரச் செயல்பாடுகளில் திளைக்கையில்,  சினிமாவோ, பாடல் எழுதுவதோ, வாசிப்போ, வேறு அந்தரங்கச் செயல்பாடோ, எதுவாயினும் சரி, எழும் பித்தத்தைத் தணிக்க மொழியைக் கிளறி நான் பெறும் கவிதைகளை நூல்களாக வெளியிட்டு விடுகிறேன். நூல்கள் எழுதுவது மட்டுமே நான் எனக்காகச் செய்துகொள்ளும் சுயநலச் செயல் என்று தீவிரமாக நம்புகிறேன். அப்படியே இந்த ஆண்டும், ‘மீண்டும் கண்டெடுக்கப்படும்’, என்ற கவிதைத் தொகுப்பும், ‘புலியும் புலிபோலாகிய புலியும்’, என்ற கவிதைத் தொகுப்பும் உருவாகியிருக்கின்றன. என் புதிய கவிதைத் தொகுப்புகளை, காஞ்சனை நூலாறு பதிப்பாக வெளியிடுகிறேன்.

“மீமொழி”, Zero Degree Publishing வெளியிடும் என் புதிய சிறுகதைத் தொகுப்பு. வாழ்வின் வெவ்வேறு நிலைகளில் தொனிக்கும் உணர்வுகளின் மொழிக்கு அப்பால் சென்று ஒரு கதையைச் சொல்லமுடியுமா, ஒட்டுமொத்தமாக ஒரு கதையின் வழியாக ஓர் உணர்வுக்கு வரையறை கொண்டு வர இயலுமா என்று முயற்சித்து இருக்கிறேன். உரோமன் யாக்கோபுசன் மொழியின் செயற்கூறுகளில் ஒன்றாக மீமொழியைச் சுட்டுகிறார். பத்து சிறுகதைகள் அடங்கிய இது என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு.

Write To Author

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi